Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அப்போது பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியது
கேப்டன் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயண களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தனது முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.
யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் அவர் அறிவிப்பார். பெரிய கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை இடம், எந்த தொகுதி என்பது குறித்தெல்லாம் கலந்து ஆலோசித்து தெரிவிப்பார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. அப்படியிருக்கும் போது தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.